மே, 2008 க்கான தொகுப்பு

செல்வேந்திரன் கவிதை

மே 31, 2008

ஒரு கவிஞன் உருவாகுகிறான்

குனிந்து நீ பெருக்கினாய்
குருடானது கண்கள்
மின்னல்தானே கண் பறிக்கும்
நிலவுமா?
எழுதி முடித்துவிட்டு
எப்படி என் புலமையென்றேன்
“ச்சீ பொருக்கி” என்கிறாய்
வா பொறுக்கலாம்
தமிழ் வளர்க்கலாம்!

           – செல்வேந்திரன்
             ஆனந்த விகடன் [28-11-07]

Tamil Poem 11

மே 29, 2008

அமைதி

கவிஞர்களின் சங்கம நாள்
கவிதை எழுதச் சொன்னார்கள்
எனக்கு வந்த தலைப்பு “அமைதி”.
வெள்ளைத் தாளில் எழுத அமர்ந்தேன்
மற்ற கவிகள் அமைதியானார்கள்.

நான் (?)
அமைதியற்று, அமைதியற்று
மூலைகலங்கிற்று, கண்கள் சோர்ந்திற்று
இறுதியாக கவிதையை முடித்தேன்,
என் அழகிய பெயருடன்.

வெள்ளைத்தாளில் “அமைதி” தலைப்பாக
என் அழகிய பெயர் முடிவாக
இடைவெளி அமைதியாய் இருந்தது
ஒன்றும் எழுதப்படாமல்.

கவிஞர்களின் சங்கம நாளில்,
கவிஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
“என் கவிதையின் அமைதியை
யாரும் கெடுத்து விடாதீர்
இடையில் ஏதேனும் எழுதி”.

- ஜோவியா

Tamil Poem 10

மே 24, 2008

“இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல” என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் “முதிர்கன்னி” என்ற கவிதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வின் வெளிப்பாடே நான் எழுதும் இந்த “முதிர்கன்னி”

               முதிர்கன்னி

தாலாட்டி, சீராட்டி,
நல்லமுது, நிலாச்சோறூட்டி,
இரட்டைச் சடை, சிண்டு, ஒற்றைப்பூவென
அழகு பார்த்து வளர்த்த நல்பெற்றோரே!
வயசுக்கு வந்தவுடன்
உறவெல்லாம் சொல்லி விருந்து வெச்சீங்க
“இந்தப் பூ” விற்பனைக்கென சமிக்ஞை தந்தீங்க.

முதலில் நாட்கள் ஓடின
இப்ப வருடங்கள் ஓடுது
பெட்ரோலும் தீரப்போகுது
ஜனனப்பெட்ரோலும் தீரப்போகுது.

தத்துவம் பேசி, மத ஒழுங்கு கடைபிடிச்சு
சமுகக்கட்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்களே!
நாங்கள் (முதிர்கன்னி) உட்பட
விடுதலையாக சுதந்திரக் காட்டில்
இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்திருந்தால்
நான் இந்நேரம் பாட்டியாயிருப்பேன்.

நான் கன்னியாக இருந்தபோது கண்ணாடி பார்த்தால்
பருவப் பூரிப்புப் பரவசத்தில்,
“பருவக் காயிரண்டைக் கனியவைக்க யார் வருவா
பருவக் காளையது பருவத்தில் வருமா
கல் வைத்துக் கனியவைக்குமா
கண், கை வைத்து கனியவைக்குமா” என
மனக்கவிதை எழுதிய காலமும் போச்சே!

நான் இப்போதும் அதே கண்ணாடி பார்க்கிறேன்
என் நிர்வாண உடல் பார்க்கிறேன்
காரித் துப்புகிறேன்
முலையிரண்டும் ஊஞ்சலாகி விழுதாகிறது
சங்ககாலப்பெண் முறத்தால் புலியை விரட்டினாலாமே
என் முலையிரண்டையும் அறுத்தெறிகிறேன் காகத்திற்கு
நீண்ட நகங்களை வெட்டுவதில்லையா?

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்
நானும் விரதம் இருக்கிறேன்
எனது விரதம் “விரகதாபம்”
எனது விரதத்திற்கு முடிவில்லை.

இரவு நேரத்தில்,
இரவு படர்ந்த தேசங்களிலிருந்து வரும்
புணர்ச்சிகளின் முணங்கல்களும், மூச்சின் உச்ச ஸ்தாதியும்
எங்களுக்கு மட்டும் கேட்கிறது
விழிகளில் இருந்து வழியும் கண்ணீர்
காதை அடைகிற நேரத்தில்
சூரியன் விழித்து விடுகிறான்.
எங்கள் விழிகள் தூங்குவதில்லை
“தூக்கமின்மை”
எங்களைப் பார்த்துச்சென்ற வரன்கள் தந்த
“வரனிதட்சனை”.

“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்
ஜகத்தினை அழி” என்றான் பாரதி.
என் பசி தீர்க்க யாரை அழைப்பது பாரதி
மன்னிக்கவும்
என் பசி தீர்க்க யாரை அழிப்பது பாரதி.

தலைவியின் சிறிதுகால தலைவர் பிரிவை
காமத்துப்பாலில் பத்துக் குறளில் தந்தார் வள்ளுவர்
எங்களுக்கு எந்தக் குறள் தந்தார்
உன் அனுமதியுடன்
1331-வது குறளை நானே எழுதுகிறேன்
“பூப்பெய்தி ஆண்டோடி விலக்கு மாய்ந்து
விரகதாபமுற்றி முதிர்கன்னியென்ற நடைபிணம்”.

                                                         – ஜோவியா

எண்ணலை 1

மே 10, 2008

நான் பிறந்த நாளிலிருந்து இப்பதிவை எழுதுகிற இன்றைய நாள் 10-May-2008 வரை 12797 நாட்க்களைக் கடந்து இருக்கிறேன். இந்நாட்கள் எல்லாம் அல்லது ஓரிரு நாட்கள் அர்த்தமுள்ள நாட்களா என்றால் இல்லை. ஏதோ
பிறந்துவிட்டேன், வளர்ந்துவிட்டேன் ஒரு செடியாக, மரமாக, விலங்காக. எப்பொழுது மனிதனாக வளர்வேனென்று தெரியவில்லை. நாட்களும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சரி, ஒவ்வொரு நாட்களும் செல்கையில் நான் எப்படி சிந்திப்பது, நினைப்பது?. என் வாழ் நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று வருத்தப்படுவதா அல்லது என் வாழ் நாளில் ஒரு நாள் கூடியுள்ளது என்று மனம் மகிழ்வதா?. தெரியவில்லை எனக்கு.

பிறந்த தேதி எனக்குத் தெரிவதால், கடந்த நாட்கள் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்று சொல்லலாமா?. இது நேர்மறைச் சிந்தனையா? அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

இறந்த தேதி தெரியாததால், என் மரணம் அடுத்த வினாடியோ அல்லது எப்பொழுதோ தெரியாது அதனால் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லலாமா?. இது எதிர்மறைச் சிந்தனையா?
அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

ஆனந்த விகடனுக்கு – கண்டனம்

மே 9, 2008

ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை கண்டித்து அதன் அலுவலகத்திற்கு நான் அனுப்பிய கண்டனக் கடிதம்

ஆசிரியர் ஆனந்த விகடன் அவர்களுக்கு ஜோ.தாமஸ் எழுதும் கண்டனக் கடிதம்.
ஆகஸ்ட் 1, 2007 -ல் வெளிவந்த ஆனந்த விகடனில், திரு.ஞாநி எழுதும் “ஓ பக்கங்கள்” 108 -வது கட்டுரையில்
கனவு-௩ என்ற பகுதியினை தாங்கள் படித்தோ அல்லது படிக்காமலோ வெளிட்டதற்கு எனது கண்டனத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.ஞாநி அவர்களை கண்டித்து என் கண்டன விளக்கக் கடிதத்தை தொடர்கிறேன்.

திரு.ஞாநி அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது,
சுருட்டுவது” போன்ற செயல்களைச் செய்தவரைப் போல் கட்டுரையை எழுதி உள்ளார் என்று சொல்வதைக்
காட்டிலும், அவர் அக்கட்டுரையில் “திரு.அப்துல்கலாம் ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது
செய்துள்ளார்” என்று அழுத்தம் திருத்தமாக பொருள்படும் விதத்தில் தான் கட்டுரையை எழுதியுள்ளார் என்று
சொன்னால் சரியாக இருக்கும்.

முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் மற்றும் பொறுப்பு அதிகாரி ஆகியோர்,
திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் எப்படி என்றால், “தாங்கள் ஜனாதிபதியாகி
விட்டதால், தாங்கள் வசித்த வீட்டை அண்ணா பல்கலைக்கழகத்திடம் இந்த தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுகிறோம்”
என்று கடிதம் எழுதியிருக்கவேண்டும். இது அண்ணா பல்கலைகழகத்தின் நிர்வாகிகள் செய்த ஞாநி சொல்வது போல்
ஊழல், முறைகேடு தானே ஒழிய திரு.அப்துல் கலாம் செய்தது அல்ல.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஐந்து ஆண்டு காலத்தில் எத்தனை துணை வேந்தர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள்
பதவி வகித்தார்களோ அத்தனை பேரும் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அதன்பின் திரு.அப்துல் கலாம் அவர்கள்,
தங்களது பொருட்களை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தாலோ அல்லது அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ
ஞாநி சொல்வது போல் தவறல்ல ஆனால் மிகச்சிறிய தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திரு.ஞாநி அக்கட்டுரையில் எந்த இடத்திலும் அவர் கூறிய குற்றத்திற்கு காரணமான நபர்களை விட்டுவிட்டு
திரு.அப்துல் கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது” போன்ற செயல்களுக்குச் சமமான,
ஒப்பான செயலைச் செய்தவர் என்று குற்றம்சாட்டுகிறார்.

திரு.ஞாநி அவர்களே, திரு.அப்துல் கலாமை உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் (அவரது அதிநவின ஏவுகணைகள்,
அணு குண்டுகள் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை என்ற கொள்கை) பிடிக்காது (?), என்பதனால் அவர் மீது படு
பயங்கரமான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி குற்றம் சாட்டுகிறீர்கள்.

திரு.ஞாநி அவர்களே, தாங்கள் ஞாநி என்று கனவு காணாதீர்கள். தங்களிடம் பேணாவும், பத்திரிக்கையும் இருப்பதால்
எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று நினைகாதீர்கள், எழுதாதீர்கள்.

இந்திய தேசத்தின் இளந்தளிர்களை “கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!” என்று சொல்லிச் சொல்லி விஞ்ஞானச்
சிறகுகளை முளைக்கச் செய்து வரும் உன்னத மனிதரை “கனவு” என்ற தலைப்பை வைத்தே கொச்சை படுத்துகிறீரே,

       நீங்கள் ஞாநியா அல்லது “—————-”

நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.

தங்கள் வாசகன்,
ஜோ.தாமஸ்

 

ஜெனிபர் கவிதை

மே 7, 2008

ஜெனிபர் கவிதை

எதையாவது

பேசிக்கொண்டே இரு

இல்லையெனில்

இந்த மெளனம்

காட்டிக்கொடுத்துவிடும்

நீ யாரென்பதையும்

நான் யாரென்பதையும்

- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )