எண்ணலை 2

ஜூன் 29, 2008 by joviya

மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்கள்

மென்பொருள் நிபுணர்களில் பெருபாண்மையோர் (51% அல்ல 80% வரை) மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்களே. நான் மென்பொருள் என்று குறிப்பிடுவது அவர்களது மூலையை.

பெருவாரியான மென்பொருள் நிபுணர்களிடத்தில், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த மொழிகளில் எளிய கேள்விகளைக் கேட்டும், மிக எளிய நிரல்களை எழுதச் சொல்லிக் கேட்டும் எந்த நிபுணரும் விடையளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே இதை எழுதுகிறேன்.

மென்பொருள் நிபுணர்களை தேர்ந்தெடுக்கும் மென்பொருள் கம்பெனிகள், எதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கிறார்களோ தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற மென்திறமைகள், ஆங்கிலப் பேச்சாற்றல், குழு செயல்பாடு, ஆளுமை மற்றும் தீர்வுகாணும் ஆற்றல் நிச்சயமாக பொறியல் மாணவர்களைக்காட்டிலும் TV சீரியல்-சினிமா நடிகை-நடிகர்கள், தொகுப்பாளர்கள்,
குத்தாட்ட நடிகை-நடிகர்கள், மாடல்கள், உயர் தர விபச்சாரிகள் போன்றோர்க்கு மிகுதியாக இருக்கிறது. எனவே ஏதோவொரு மென்பொருள் கம்பெனி இவர்களை (பரிச்சார்த்தரமாக) தேர்ந்தெடுத்து சேர்த்துப்பாருங்கள் நிச்ச்யமாக அவர்களைக்காட்டிலும் பின்னூவார்கள்! மின்னூவார்கள்! மென்பொருள் எழுதுவார்கள்!

இந்த இடத்தில் Dr.C.K.Prahlad’s வார்த்தைகளைக் குறிப்பிட கடமைபட்டுள்ளேன்.
Dr.C.K.Prahlad, the management guru says, “When the first Microsoft ‘Windows’ came out, it was absolutely phenomenal. Some five people were involved in its creation. Thereafter, you by one after another and the changes are very marginal. Now they have 2500 Ph.D.s who have not created anything different. The same argument surfaces: once things are in place they are organised and crystallised!”.

அமைச்சர் இலஞ்சம் வாங்குவதை எப்படி மறைமுகமாக வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினார்களோ, அது போல் மென்பொருள் நிபுணர்கள் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த சம்பளத்துடன் கொழுத்துத் திரியும் மூலைக் கொழுப்பற்ற நிபுணர்களையும் மறைமுகமாக அவர்களிடம் எளிய கேள்விகள் மற்றும் நிரல்களை  கேட்டும், எழுதச் சொல்லியும் அவர்களது அறியாமை நிலையை அப்படியே வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பிட எண்ணுகிறேன், விளைகிறேன். முடியவில்லை, ஏனென்றால் என் தம்பி, தங்கை, நண்பர், உறவினர் என்று நீயூரான்கள் அற்றவர்கள் மென்பொருள் நிபுணர்களாக உள்ளனர். என்ன செய்வது? கவிதை எழுதி மனதை சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியது தான். அப்படி எழுதிய கவிதை தான் “எதனால்”

மென்பொருளற்ற மென்பொருள் நிபுணர்களே!
கண்ணாடி பார்க்காதீர்!
உங்கள் பிம்பமே உங்களைக் காரித்துப்பும்!

புரட்சியாளர் ” சே குவேரா “

ஜூன் 13, 2008 by joviya

கலைஞரின் 85-வது பிறந்த நாளில் அவருக்கு அர்பணிக்கும் கவிதை.

புரட்சியாளர் ” சே குவேரா “-வின் 80-வது பிறந்த நாள் (14-06-192 8) நினைவுக் கவிதை

புரட்சியாளர் ” சே குவேரா “

சே குவேரா!
நீ வேறா? புரட்சி வேறா?
இல்லை
நீ புரட்சியின் வேரா?

” சே குவேரா “
உன் பெயர் உச்சரிக்கையில்
என் உச்சிமயிர் சிலிர்க்கிறதே!
உள்ளத்தில் தீ மூள்கிறதே!

ஏனோ சிலர் உனை
அலங்காரப் படம் ஆக்கிவிட்டனர்
ஆயத்த ஆடைகளில்
தெரிந்தோ? தெரியாமலோ?
ஏகாதிபத்தியத்தின் வியாபாரத் தந்திரமோ?
ஏகோபித்த வசீகரச் சின்னமோ? - நீ

” ரொசாரியோ “
நீ பிறந்த ஊராக இருக்கலாம்
இன்றும் நீ வாழும் ஊர்
புரட்சி விதைக்கப்பட்ட இளைஞர்களின் ” இதயூர் ” (இதய ஊர்)

தோட்டா உனை நோக்கிப் பாய்ந்தாலும்
காட்டாதே உன் முதுகு - புறமுதுகு!
சங்கத்தமிழ் பயின்றவனோ ?!
உன் தாய் தமிழச்சி மரபணு கொண்டவளோ ?!

நீ பிறந்த மாதம் ஜுன் (14-06-192 8)
என் ஆசான் கலைஞர் பிறந்த மாதமும் ஜுன் (03-06-1923)
முத்தமிழ் அறிஞர் கலைஞரோ உனக்கு - அண்ணன்
நீயோ! அவர் இதயத்தில் என்றென்றும் - புரட்சி மன்னன்.

எண்பத்தைந்து அகவையிலும் எழுதுகிறார் ஏட்டில்
உன் எண்பதாவது அகவையாண்டில்
உனது கியூபப் புரட்சியை, பாடிஸ்டா வீழ்ச்சியை
யாருக்காக? இளைஞர்களே! நமக்காக.

நீ மருத்துவராய்
மோட்டார் சைக்களில் பயனித்து,
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், கம்யூனிசத்தின் அவசியத்தையும்
கண்டுணர்கிறாய் புரட்சியாளனாகிறாய்!
மோட்டார் பயணம் புரட்சிப்பயணமாகிறது.

எல்லைகள் கடந்தாய், ” பிடல் காஸ்ட்ரோ ” நண்பரானார்
கியூபப் புரட்சி கண்டாய், பாடிஸ்டாவை வெண்றாய்!
காங்கோ சென்றாய், பொலிவியா சென்றாய்…
புரட்சியாளனின் பயணம் முடிவதில்லை
தொட்ர்வது, தொடர்ந்துகொண்டே இருப்பது.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க ” யூதாஸ் ” இருந்தான்
ஐந்து வெள்ளிக்காசை இலஞ்சமாகப்  பெற்றுக்கொண்டு
” சே குவேரா ” ஐக் காட்டிக்கொடுக்க ஒருவள் இருந்தாள்
ஐம்பது பெஸோக்களை  ” சே குவேரா ” விடம் பரிசாக வாங்கிக்கொண்டு.

அன்று அக்டோபர் - 9, மதியம் 1.10 மணி

” கோழையே! சுடு,
நீ சுடுவது ” சே “-வை அல்ல
ஒரு சாதாரண மனிதனை “.

தோட்டா ஒன்று ” சே “-யின் இதயத்தை துளைத்தது
கோடானகோடி இதயங்களில் விதைக்கப்பட்டது ” புரட்சி “!

புரட்சியாளன் என்றும் இறப்பதில்லை
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்
களர் இதயங்களில் அல்ல
விளை இதயங்களில்.

ஒடுக்கப்பட்டவர்களின் பயணம் உலகமெலாம் தொடர்கிறது
அடக்குமுறைக்கு எதிராக,
மொழி, இனம் காத்திட
மறவன் சேனையாக, இளைஞர் பட்டாளமாக……

                                           - ஜோவியா 

 

செல்வேந்திரன் கவிதை

மே 31, 2008 by joviya

ஒரு கவிஞன் உருவாகுகிறான்

குனிந்து நீ பெருக்கினாய்
குருடானது கண்கள்
மின்னல்தானே கண் பறிக்கும்
நிலவுமா?
எழுதி முடித்துவிட்டு
எப்படி என் புலமையென்றேன்
“ச்சீ பொருக்கி” என்கிறாய்
வா பொறுக்கலாம்
தமிழ் வளர்க்கலாம்!

           - செல்வேந்திரன்
             ஆனந்த விகடன் [28-11-07]

Tamil Poem 11

மே 29, 2008 by joviya

அமைதி

கவிஞர்களின் சங்கம நாள்
கவிதை எழுதச் சொன்னார்கள்
எனக்கு வந்த தலைப்பு “அமைதி”.
வெள்ளைத் தாளில் எழுத அமர்ந்தேன்
மற்ற கவிகள் அமைதியானார்கள்.

நான் (?)
அமைதியற்று, அமைதியற்று
மூலைகலங்கிற்று, கண்கள் சோர்ந்திற்று
இறுதியாக கவிதையை முடித்தேன்,
என் அழகிய பெயருடன்.

வெள்ளைத்தாளில் “அமைதி” தலைப்பாக
என் அழகிய பெயர் முடிவாக
இடைவெளி அமைதியாய் இருந்தது
ஒன்றும் எழுதப்படாமல்.

கவிஞர்களின் சங்கம நாளில்,
கவிஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
“என் கவிதையின் அமைதியை
யாரும் கெடுத்து விடாதீர்
இடையில் ஏதேனும் எழுதி”.

- ஜோவியா

Tamil Poem 10

மே 24, 2008 by joviya

“இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல” என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் “முதிர்கன்னி” என்ற கவிதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வின் வெளிப்பாடே நான் எழுதும் இந்த “முதிர்கன்னி”

               முதிர்கன்னி

தாலாட்டி, சீராட்டி,
நல்லமுது, நிலாச்சோறூட்டி,
இரட்டைச் சடை, சிண்டு, ஒற்றைப்பூவென
அழகு பார்த்து வளர்த்த நல்பெற்றோரே!
வயசுக்கு வந்தவுடன்
உறவெல்லாம் சொல்லி விருந்து வெச்சீங்க
“இந்தப் பூ” விற்பனைக்கென சமிக்ஞை தந்தீங்க.

முதலில் நாட்கள் ஓடின
இப்ப வருடங்கள் ஓடுது
பெட்ரோலும் தீரப்போகுது
ஜனனப்பெட்ரோலும் தீரப்போகுது.

தத்துவம் பேசி, மத ஒழுங்கு கடைபிடிச்சு
சமுகக்கட்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்களே!
நாங்கள் (முதிர்கன்னி) உட்பட
விடுதலையாக சுதந்திரக் காட்டில்
இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்திருந்தால்
நான் இந்நேரம் பாட்டியாயிருப்பேன்.

நான் கன்னியாக இருந்தபோது கண்ணாடி பார்த்தால்
பருவப் பூரிப்புப் பரவசத்தில்,
“பருவக் காயிரண்டைக் கனியவைக்க யார் வருவா
பருவக் காளையது பருவத்தில் வருமா
கல் வைத்துக் கனியவைக்குமா
கண், கை வைத்து கனியவைக்குமா” என
மனக்கவிதை எழுதிய காலமும் போச்சே!

நான் இப்போதும் அதே கண்ணாடி பார்க்கிறேன்
என் நிர்வாண உடல் பார்க்கிறேன்
காரித் துப்புகிறேன்
முலையிரண்டும் ஊஞ்சலாகி விழுதாகிறது
சங்ககாலப்பெண் முறத்தால் புலியை விரட்டினாலாமே
என் முலையிரண்டையும் அறுத்தெறிகிறேன் காகத்திற்கு
நீண்ட நகங்களை வெட்டுவதில்லையா?

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்
நானும் விரதம் இருக்கிறேன்
எனது விரதம் “விரகதாபம்”
எனது விரதத்திற்கு முடிவில்லை.

இரவு நேரத்தில்,
இரவு படர்ந்த தேசங்களிலிருந்து வரும்
புணர்ச்சிகளின் முணங்கல்களும், மூச்சின் உச்ச ஸ்தாதியும்
எங்களுக்கு மட்டும் கேட்கிறது
விழிகளில் இருந்து வழியும் கண்ணீர்
காதை அடைகிற நேரத்தில்
சூரியன் விழித்து விடுகிறான்.
எங்கள் விழிகள் தூங்குவதில்லை
“தூக்கமின்மை”
எங்களைப் பார்த்துச்சென்ற வரன்கள் தந்த
“வரனிதட்சனை”.

“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்
ஜகத்தினை அழி” என்றான் பாரதி.
என் பசி தீர்க்க யாரை அழைப்பது பாரதி
மன்னிக்கவும்
என் பசி தீர்க்க யாரை அழிப்பது பாரதி.

தலைவியின் சிறிதுகால தலைவர் பிரிவை
காமத்துப்பாலில் பத்துக் குறளில் தந்தார் வள்ளுவர்
எங்களுக்கு எந்தக் குறள் தந்தார்
உன் அனுமதியுடன்
1331-வது குறளை நானே எழுதுகிறேன்
“பூப்பெய்தி ஆண்டோடி விலக்கு மாய்ந்து
விரகதாபமுற்றி முதிர்கன்னியென்ற நடைபிணம்”.

                                                         - ஜோவியா

எண்ணலை 1

மே 10, 2008 by joviya

நான் பிறந்த நாளிலிருந்து இப்பதிவை எழுதுகிற இன்றைய நாள் 10-May-2008 வரை 12797 நாட்க்களைக் கடந்து இருக்கிறேன். இந்நாட்கள் எல்லாம் அல்லது ஓரிரு நாட்கள் அர்த்தமுள்ள நாட்களா என்றால் இல்லை. ஏதோ
பிறந்துவிட்டேன், வளர்ந்துவிட்டேன் ஒரு செடியாக, மரமாக, விலங்காக. எப்பொழுது மனிதனாக வளர்வேனென்று தெரியவில்லை. நாட்களும் ஓடிக்கொண்டே இருக்கிறது.

சரி, ஒவ்வொரு நாட்களும் செல்கையில் நான் எப்படி சிந்திப்பது, நினைப்பது?. என் வாழ் நாளில் ஒரு நாள் குறைந்து விட்டது என்று வருத்தப்படுவதா அல்லது என் வாழ் நாளில் ஒரு நாள் கூடியுள்ளது என்று மனம் மகிழ்வதா?. தெரியவில்லை எனக்கு.

பிறந்த தேதி எனக்குத் தெரிவதால், கடந்த நாட்கள் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை கூடி வருகிறது என்று சொல்லலாமா?. இது நேர்மறைச் சிந்தனையா? அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

இறந்த தேதி தெரியாததால், என் மரணம் அடுத்த வினாடியோ அல்லது எப்பொழுதோ தெரியாது அதனால் என் வாழ் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று சொல்லலாமா?. இது எதிர்மறைச் சிந்தனையா?
அல்லது அறிவுப்பூர்வமான சிந்தனையா?.

ஆனந்த விகடனுக்கு - கண்டனம்

மே 9, 2008 by joviya

ஆனந்த விகடனில் வெளிவந்த கட்டுரையை கண்டித்து அதன் அலுவலகத்திற்கு நான் அனுப்பிய கண்டனக் கடிதம்

ஆசிரியர் ஆனந்த விகடன் அவர்களுக்கு ஜோ.தாமஸ் எழுதும் கண்டனக் கடிதம்.
ஆகஸ்ட் 1, 2007 -ல் வெளிவந்த ஆனந்த விகடனில், திரு.ஞாநி எழுதும் “ஓ பக்கங்கள்” 108 -வது கட்டுரையில்
கனவு-௩ என்ற பகுதியினை தாங்கள் படித்தோ அல்லது படிக்காமலோ வெளிட்டதற்கு எனது கண்டனத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு.ஞாநி அவர்களை கண்டித்து என் கண்டன விளக்கக் கடிதத்தை தொடர்கிறேன்.

திரு.ஞாநி அவர்கள் முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது,
சுருட்டுவது” போன்ற செயல்களைச் செய்தவரைப் போல் கட்டுரையை எழுதி உள்ளார் என்று சொல்வதைக்
காட்டிலும், அவர் அக்கட்டுரையில் “திரு.அப்துல்கலாம் ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது
செய்துள்ளார்” என்று அழுத்தம் திருத்தமாக பொருள்படும் விதத்தில் தான் கட்டுரையை எழுதியுள்ளார் என்று
சொன்னால் சரியாக இருக்கும்.

முதலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் மற்றும் பொறுப்பு அதிகாரி ஆகியோர்,
திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும் எப்படி என்றால், “தாங்கள் ஜனாதிபதியாகி
விட்டதால், தாங்கள் வசித்த வீட்டை அண்ணா பல்கலைக்கழகத்திடம் இந்த தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுகிறோம்”
என்று கடிதம் எழுதியிருக்கவேண்டும். இது அண்ணா பல்கலைகழகத்தின் நிர்வாகிகள் செய்த ஞாநி சொல்வது போல்
ஊழல், முறைகேடு தானே ஒழிய திரு.அப்துல் கலாம் செய்தது அல்ல.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஐந்து ஆண்டு காலத்தில் எத்தனை துணை வேந்தர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகள்
பதவி வகித்தார்களோ அத்தனை பேரும் கடிதம் எழுதியிருக்க வேண்டும். அதன்பின் திரு.அப்துல் கலாம் அவர்கள்,
தங்களது பொருட்களை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தாலோ அல்லது அறிக்கை வெளியிட்டு இருந்தாலோ
ஞாநி சொல்வது போல் தவறல்ல ஆனால் மிகச்சிறிய தவறு என்று வேண்டுமானால் சொல்லலாம்.

திரு.ஞாநி அக்கட்டுரையில் எந்த இடத்திலும் அவர் கூறிய குற்றத்திற்கு காரணமான நபர்களை விட்டுவிட்டு
திரு.அப்துல் கலாம் அவர்களை “ஊழல், முறைகேடு, பணம் வாங்குவது, சுருட்டுவது” போன்ற செயல்களுக்குச் சமமான,
ஒப்பான செயலைச் செய்தவர் என்று குற்றம்சாட்டுகிறார்.

திரு.ஞாநி அவர்களே, திரு.அப்துல் கலாமை உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால் (அவரது அதிநவின ஏவுகணைகள்,
அணு குண்டுகள் நாட்டின் பாதுகாப்பிற்குத் தேவை என்ற கொள்கை) பிடிக்காது (?), என்பதனால் அவர் மீது படு
பயங்கரமான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி குற்றம் சாட்டுகிறீர்கள்.

திரு.ஞாநி அவர்களே, தாங்கள் ஞாநி என்று கனவு காணாதீர்கள். தங்களிடம் பேணாவும், பத்திரிக்கையும் இருப்பதால்
எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று நினைகாதீர்கள், எழுதாதீர்கள்.

இந்திய தேசத்தின் இளந்தளிர்களை “கனவு காணுங்கள்! கனவு காணுங்கள்!” என்று சொல்லிச் சொல்லி விஞ்ஞானச்
சிறகுகளை முளைக்கச் செய்து வரும் உன்னத மனிதரை “கனவு” என்ற தலைப்பை வைத்தே கொச்சை படுத்துகிறீரே,

       நீங்கள் ஞாநியா அல்லது “—————-”

நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.

தங்கள் வாசகன்,
ஜோ.தாமஸ்

 

ஜெனிபர் கவிதை

மே 7, 2008 by joviya

ஜெனிபர் கவிதை

எதையாவது

பேசிக்கொண்டே இரு

இல்லையெனில்

இந்த மெளனம்

காட்டிக்கொடுத்துவிடும்

நீ யாரென்பதையும்

நான் யாரென்பதையும்

- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )

Tamil Poem 9

ஜனவரி 31, 2008 by joviya

மீசையை பெண்ணாக பாவித்து எழுதப்பட்ட கவிதை.

மீசை

நான் அவன் காதலி,
பருவத்தில் பயிர் செய்ய வந்தவள்.
அவனில் ஹார்மோன் விளையாட்டு
விபரீதம் நான்.
அவனில் ஆண்மையின் வெளிச்சம் நான்.
அவன் விரும்பாவிட்டாலும்
அவனில் அரும்பிவிடுவேன்.
அரும்பின் குரும்புகள் உண்டு.
எரிச்சல் படாதே!
அவை எனது காதல் ஸ்பரிசம்.

எனது முத்தம் அவன் மேல் உதட்டோடு
கீழ் உதட்டோடு சேர்ந்து தர
ஆங்கிலப் படம் பார்த்ததில்லை.
முடி முளைத்த மச்சம் நான்,
தருவேன் ஆண்மை அதிர்ஸ்டம்.
நீ ஹிட்லர் (செக்ஸில்)
உனக்கு நானுமா ஹிட்லர்?
என்னை வளைப்பதால் என்ன பயன்?
வில்லை வளையுங்கள்,
சீதை கிடைப்பாள்.

என்கிட்ட ஏனிந்த முறைப்பும், முறுக்கலும்
மெல்லியாள் நான் வலியாளைத் தேடும்
காமத்தீயால் கருத்திருந்தேன்
ஓர் பாலுறவு நானறியேன்.
எனக்கு ஏன் கருத்தடை ஆப்ரேசன்.

கலைஞர் கண்ட உளியா நான்?
வைரமுத்துவின் குறுக்குச் சிறுத்தவள்.
கெடு நேரத்தில் ஏனிந்தத் தடவல்,
எனக்கு கூச்சமாயிருக்கு.

குருடர், செவிடர் பார்ப்பதில்லை!
நெட்டை, குட்டை பார்ப்பதில்லை!
நிறவெறி என்னில் இல்லை!
மதவெறியும் என்னில் இல்லை!

ஆடவரே,
சூதாட்டத்தில் வேண்டுமானால் பாஞ்சாலியை வையுங்கள்
என்னையும் வைப்பது முறையோ?
பாஞாலிக்கு துச்சாதனன் அவையில் கற்பு மிஞ்சியது.
உங்கள் அவையில் எங்ஙனம் நான் மிஞ்சுவது.

நான்,
ஐஸ்வர்யாவதும், டையானா ஹேடனாவதும்
உங்கள் கையில்
காயசண்டிகையாவதும், சூர்பணகையாவதும்
உங்கள் கையில்.
ஓர் வேண்டுகோள்:
என்னைப் பூலான்தேவியாக மாற்றிவிடாதீர்!
என் கையில் இருப்பது ஈட்டி தான்
பாவம் என் காதலர், குத்தப்போகிறது
காதல் கொடையாக கத்தரித்துவிடுங்கள்
என் கைகளைத்தான் சொல்கிறேன்.

நாட்டியம் நானறியேன்
காதல் சரசம் நான் புரிவேன்
“ஒருவனே” உன்னிடம் மட்டும் தான்.

ஆடவரே,
விரும்பியபடி தடவிக்கலாம்
மலை வாழைத்தொடையா எனது?
காலத்துக்கும் வெச்சுக்கலாம்
எனது அதிர்ஸ்டம் நினைவிருக்கா?
ரதிக்கு இச்சதி தெரியுமானால்
விதியென விட்டுவிடு,
என்னை ஒதுக்கிவிடு,
சொல்லிவிடு,
உன் கண்ணகி இருக்கும் வரை
நான் மாதவி தானே!

கண்ணகியே,
என்னால் உங்களில் இடைவெளியா?
உன் கோவலனிடம் கூறிவிடு
மாதவி நான் மாண்டுவிடுகிறேன்.

என்னவனே!
உன் கண்ணகி இறந்துவிட்டளா?
“மாதவி” என்னையும் ஒதுக்கிவிடுங்கள்
கண்ணகிக்கு எனது இதய அஞ்சலி.
பின்னாளில்,
கண்ணகி நினைவில்
“மாதவி” என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

வாழையடி வாழை நாங்கள்
எங்களில் மலடி யாருமிலர்
வெட்டினால் வளர்வோம்
அழித்தால் புதியதாய்ப் பிறப்போம்
இன்னும் வலுவோடு.
உங்கள் ஆண்மை உதிருமானால்
நாங்கள் பொறுப்பல்ல
மருத்தவரை நாடவும்.
நாங்கள் தருகிறோம்
வாழ்நாள் உத்திரவாதம்
எங்களால் வராது
உங்களுக்கு “எய்ட்ஸ்”
எங்களுக்கு சிசேரியன் நடந்தால்
காதலரே, டாக்டரிடம் கூறவும்
கத்தரியை ஸ்டேரலைஸ் (சுத்தம்) செய்ய
மறந்துவிடாதே இதற்கு முன்
கத்தரிக்கப்ப்ட்டவன் “எய்ட்ஸாலி”.
- ஜோவியா

Tamil Poem 8

அக்டோபர் 11, 2007 by joviya

முத்தம்

முத்தம் என்பது தான் என்ன?
இரு இதழ்கள் இணைந்த பதிப்பா?
அல்லது
இரு இதழ்கள் திறந்த பிடிப்பா?
பதிப்போ! பிடிப்போ!
எதுவாயினும் இருக்கட்டும்.

முத்தம் ஓர் மொழி
முதல் மொழி,
முத்தான மொழி,
மனிதகுலத்தின் செம்மொழி
இல்லை
உயிரினத்தின் உச்சமொழி.
எச்ச மொழியென்று யாரும்
கொச்ச மொழி பேசாதீர்.

மொத்தத்தில் முத்தம்
பாச மொழி
காம மொழி என
விழி இரண்டாய்
இனம் இரண்டாய்
முத்த மொழி இரண்டு.

முத்தம்
இரு இதழ்கள் இணைந்த பதிப்பானால்
பாசமொழி, நேசமொழி, அன்புமொழி.
முத்தம்
இரு இதழ்கள் திறந்த பிடிப்பானால்
காம மொழி.

பாசமொழி
பால் பேதமற்ற மொழி,
அகவை அற்ற மொழி,
எல்லோரும் நவின்ற மொழி.
காம மொழி
வேற்று பால் உணரும் மொழி,
பருவத்தால் பயின்ற மொழி,
கலவி இன்பத்தின்
பிள்ளை மொழி,
பிள்ளையார் சுழி!

முத்தம் எதுகையும் மோனையும் அமைந்த
நல் கவிதை
இது ஓர் மரபுக்கவிதை.
கண்ணத்தில் முத்தமிட்டால்
இருவரி திருக்குறள்
இதழோடு இதழ் கவ்வி முத்தமிட்டால்
நால்வரி நாலடியார்.

முத்தம் இடுவீர்!
முத்த மொழி மொழிவீர்!
முத்தத்தால் யாரும் மடியார்
இக்கவிதை எழுதியதால்
என்னை யாரும் அடியார்.

  - ஜோவியா